முத்தத்தில் மகிமை...
அஞ்சுகமே என் ஆசைக்கனியே யென
கொஞ்சுவதில்லையோ தாய் தன் சேயை?
நெஞ்சில் சுகமணைக்கு மிணையர்
விஞ்சிப் பருகாரோ முத்தத் தமுதை?
கஞ்சமனமுடைத்து தோழமையும் தொட்டுருகி
பஞ்சாய் கரம் சூடும் முத்தமு மினிமை தான்.
மஞ்சமும் மடமும் கண்டறிவதில்லை முத்தம்
தஞ்சங்கோரும் குருகுக்கும் கருணைச் சுனை முத்தம்.
இஞ்சித்தும் இரக்கமின்றி முத்தமதை
வஞ்சனை மொழியாக்கி கற்பிதம் பூண்டுமே
துஞ்சமுடியாத் துயரறைந்து
வஞ்சிப்பதழகல்ல மௌனவிருள் அணிந்து.
மேதிக்குலத்திற்கும் மேனிக்குள் உயிருண்டு.
ஆதி மனிதர்க்கும் அகத்திலே ஒளியுண்டு.
நாகரீக தேயத்திலே தெருத்தெருவாய் ருசிக்கும்
நாவுச்சுவை ததும்பும் முத்தத் தெவிட்டலை
மாபெரும் குற்றமெனக் கூறி யாருமே நயப்பதில்லை.
காற்றோடணைக்கும் முத்தத்தால் கள்ளூறி
நாற்றாகி விடுவதில்லை இயல்பறி.
போற்றிப் புகழும் அகநானூறு
சாற்றி நிற்கும் முத்தத் தெளிவை.
சோதரரும் சொட்டித் திகட்ட
ஆதாரமாயிருப்பது முத்தம்.
தூற்றித்துடைத்தெறிய முத்தம் நாற்றமல்ல
போற்றி நிற்கும் பாசத்து வாயிலது.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
Comments
Post a Comment