புரிந்தால் பூத்திடு....பூத்ததைக் காத்து வை....



வாழ்க்கைச் சக்கரத்தை உணராது
வதைக்கும் கல் நெஞ்சுக் காரர்களே..!
நீங்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.?

பிறக்கும் போதே ஒன்பது துவார
ஓட்டைச் சட்டையோடு ஒரு பிறப்பு.
ஏழு ஓட்டைகளை முகத்தில் பதித்து
அதிசய கண்காட்சிக் கூடமாக...
ஒரு சிலிர்ப்பு....
நீங்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.?

இருட்டுக்குளத்தில் இரத்தமூறிய வெடில்நீரில் முக்குளித்து
அழுகையுடன் அவதிப்பட்டு வந்த போது
வெளிச்சத்தை கண்டு  கூசிய கண்கள்
இன்னும் முழுமை காணவில்லையா?
நீங்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.?

ஓடும் நீரில் மறையும் விம்பமாய்
நிலையற்றதிந்த வாழ்வு...
ஆட்டம் காணும் தோல்பை சுருண்டு
ஓட்டம் காணும் விரைந்து...
வாழும் காலத்தில் வடுக்களை வரைந்து
காணப் போகும் சுகம் என்னவோ?
நீங்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.?

ஆண்ட அரசனும் மாண்ட பின்
மண்ணுக்குள் தானே
புதையுண்டு போவான்.
வாழும் காலத்தை வசந்தமாக்காது
சிறகுகளை அறுத்து எறிவதுமேன்?
நீங்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.?
உலகம் இருப்பதும் நிச்சயம் இல்லை.
ஒண்ட வந்த இடமும் நிச்சயம் இல்லை.
புரிந்தால் பூத்திடு பூத்ததை காத்து வை..
மண்ணோடு மண்ணாகி
அதுவாய் போகட்டும். நீ
பிடிங்கி எறிந்து மண்ணாக்காதே...

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹