நான் காதலிக்கிறேன். காதலித்துக் கொண்டே இருப்பேன்



நான் காதலிக்கிறேன்..
காதலித்துக் கொண்டே இருப்பேன்.
என் காதல் இறகுகளை வலிந்து
சிறைப்படுத்தி மூட
நான் தயாரில்லை.

பரந்த இந்த வான் பரப்பில்
விரிந்து சிறகடிக்கும் என் காதல்.
காதல் உயிரில் உரிமையுடையது.
காதல் உரிமையை தொட்டுணர்த்தியது.
காதல் தாய் மடியணைப்பைத் தந்தது.
காதல் மண் மகத்துவத்தை நிறைத்தது.
காதல் இருப்பின் பெறுமதியை உணர்த்தியது.
காதலில்லா வாழ்வு கரும்புகை மூட்டமே.

காதல் தாயின் கருப்பையில்
பூத்த தேவதரு வாசனை.
கருப்பை உதைத்துக் கிழித்து
பூமி வந்த ஜீவனை
அள்ளியணைக்கும் தாயும்
பஞ்சபூதங்களும் காதலின் வலியில்
அகம் குளிரும் அற்புத சக்திகள்.
காதல் வலியில் பூத்து
வசந்தம் தரும் பூஞ்சோலை.
காதலில்லாத வாழ்வுக்குள் மூடிப் புதைந்து
செத்துப்போக நான் தயாரில்லை.

காதல் ஒன்றில்லாவிடில் என்றோ
காணாமல் போயிருப்பேன்.
எத்தனை விதமான காதல் என் நெஞ்சத்தில்...
சில பச்சையம் பூசிய பசுமையாய்....
சில இரத்தமாயும் சுடும் தீயாயும்....

இளமையின் வசந்தங்களை
இனிய நினைவுகளை என்
இருப்பின் அடையாளத்தை
தேடவும் தக்க வைக்கவும்
நொடிக்கு நொடி துடிக்கும்
துடிப்பில் காதலுள்ளது.

வலிக்காத காதல் காதலல்ல
பூமிக்குள் புதைந்து
வெப்பத்திலும் நீரிலும் அவிந்து
மண்ணைக் கிழித்தெழும்
வித்துக்களை மண் சபிப்பதில்லை.
வலிதந்த விதையே மரமாகி
நிழல் தந்து கனியோடு உரம் தரும்.
காதல் புனிதங்களைப் பூக்கும்
சந்தண வாசனை.
நான் காதலிக்கிறேன்..
காதலித்துக் கொண்டே இருப்பேன்.
என் காதல் இறகுகளை வலிந்து
சிறைப்படுத்தி மூட
நான் தயாரில்லை.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹