நீயும் என் வாழ்வில் பொக்குளங்களையே பரிசளித்தாய்..... 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔


எனக்குத் தெரியும்...
நெருப்புச் சுட்டால் வலிக்கும்.
சுட்ட இடத்தில் பொக்குளம் வரும்.
ஒருக்கால் வலி உயிரைத் திருகும்.
பொக்குளம் வீங்கும் வெடிக்கும்.
வெடித்து வடியும் பொக்குள நீர்
உருகி எரிவு தரும்.
காற்றுப் பட்டாலும் எரியும்.
காற்றுப் படாவிடினும் எரியும்.
சிறிது காலத்தில் பொசுங்கிய இடம்
தடயமாய் படர்ந்திருக்கும்.
நோவிருக்காது.
நொந்த நினைவிருக்கும்.
துடித்த துடிப்பின் கனதியிருக்கும்.
அடிக்கடி வடு கண்ணில் படும்.
வதைப்புக்களும் நெருப்பை விட
கொடியவை தானே.....

பூக்களின் பிரசவ வலி
மனிதர்க்கு கேட்பதில்லை.
அது அண்டசராசரத்தையே
அதிர வைக்கும் மிகை ஒலி.
என் இதயம் பூமிக்கடியில் புதைந்து
பாதாளச் சதுக்கத்தில்
வெடித்துப் பிளப்பது உனக்குக் கேட்காது.

ஒவ்வொரு கதவுகளையும்
நீ மூடும் போதும்
நினைக்கவில்லையே உன்னைத் தேடி தேடி வந்திருக்கிறேன் என்பதை.
நான் முடியுமான வரை தட்டிய சத்தத்தை
செவிமடுக்கலையே.....
உனக்கும் எனக்குமான இடைவெளியை நீ
பணத்தைக் கொண்டு அளவிட்டாயா?
பணம் என்னிடமும் போதியளவு உள்ளது.
எனக்கு ஒரே ஒரு கவலை தான்
நீ அடிக்க விரட்ட உன்னைத் தேடி
வளர்ப்பு நாயைப் போல சுற்றியிருக்கிறேன்.

உன்னில் என் தாய் முகம் கண்டேன்.
என் தாயின் குறும்புகள் கண்டேன்.
இனி வர மாட்டேன்.
இனி  எப்போதுமே என்
பாதாள கீதம் யாருக்கும் கேட்காது.
எனக்குத் தெரியும் நெருப்புச் சுட்டால் வலிக்கும்.
நெருப்பாய் நீ செய்த செயல்களும்
வலிக்கும்.
நீயும் என் வாழ்வில் பொக்குளங்களையே
பரிசளித்துப் போகிறாய்   நன்றி.

வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹