இயற்கை வழிகாட்டி 🍀🍀🍀🍀🍀🍀🍀
தாவரத்தின் செழிப்பு
கண்ணுக்குக் குளிர்ச்சி.
நீரோடும் மண்ணோடும்
போராடும் செழிப்பூட்டும்
வேர்களின் தியாகம்
பறைமுழக்கம் ஆவதில்லை.
ஒளியோடு காற்றோடு
புணர்ந்து புன்னகைத்து
இலைகளும் போராடும்
விளம்பரம் இன்றி(க்)
கனிகொடுக்கும்.
போராட்டமில்லாத வாழ்வு
பிணமான வாழ்வே.
நிறைகுடப் போராட்டத்தின்
நல்ல குறிகாட்டிகள் தாவரங்கள்.
தற்போசணிகள் எப்போதும்
இரந்துண்டு வாழ்வதில்லை.
தன்நிழலைச் சேர்ந்தோரை
தவிக்கவும் விடுவதில்லை.
தந்திரமாக கொடுத்துக் கொடுத்தே
இனத்தைப் பெருக்கும்.
நேரந்தவறாத வேலை...
ஓய்வில்லை. ஓய்வதுமில்லை.
மௌனத்தில் மறுமலர்ச்சி......
போராடும் பொறுமை காக்கும்.
முக்கி முழங்காத போராட்டம்....
கண்ணைக் கவரும் செழிப்பு....
இடத்தின் குறிகாட்டும் பண்பு....
ஆர்ப்பாட்டமில்லை....
அணிவகுப்பில்லை.......ஆனாலும்
நிலைத்திருப்பில் சிறப்பு........
நிழலோடு குளிரூட்டி
அழகோடு பூத்துக் காய்த்து
இலையோடு பூவும் தண்டும்
வேரோடு பட்டை என
தன்னில் நிறைந்ததை தானமாக்கும்
தாவரங்களிடம் கற்றிட நிறைய உண்டு.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
4:12 pm
Comments
Post a Comment