சிரிப்புத் தான் வந்ததடி... தோழி
சிரிப்புத் தான் வந்ததடி.
😜😜😜😜😜😜😜😜😜😜

கல்யாண வயது வந்ததென சொல்லி
மாப்பிள்ளை பார்த்தாரடி தோழி
மாப்பிள்ளை பார்த்தாரடி.
நாட்டு மாப்பிள்ளை நல்லதில்லை என
வெளிநாடு அனுப்பினால் வீடும் விளங்குமென தீர்மானங் கொண்டாரடி.
ஓடித்திரிந்ததில் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை ஆப்பிட்டுக் கொண்டானடி.

தரகரிடம் அந்த மாப்பிள்ளை வைத்த
வேண்டுதல்கள் இவைதானடி...
நீண்ட முடியுடைய பெண் வேணும்.
மெல்லிய பெண்ணாக இருக்கோணும்.
சின்னப் பெண்ணாக இருக்கோணும்.
நான் அத்தனை அம்சமும்
பொருந்தி இருந்ததால்
பெருமை அடைந்தேனடி தோழி
பெருமை அடைந்தேனடி....

சம்மந்தம் பேசிய தரகன் தந்த
புகைப்படம் எனக்கும் பிடித்ததடி.....
கமல் போல் அழகிய விழியுடன்...
ஓர் அழகுத் திருமுகம் ....
வகிர்ந்தெடுத்த தலைமுடி....
பார்க்கப் பார்க்கத் தேனூறும் பார்வையடி....
ஆவல் தான் மனமெங்கிலும்...
நான் தேடித் திரவியம் தேடினும்
இவன் போல் ஒரு மாப்பிள்ளை அமையாதடி.....என்
கற்பனைச் சிறகுகள் காற்றில் பறந்திட
கை கோர்த்து அவன் என் கையைப் பிடித்திட
வெட்கமும் நாணமும் கொல்லவும் அள்ளவும் கனாக் கண்டேனடி
ஆண்டாள் போல்
கனாக் கண்டேனடி.....

சம்மந்தக் கலப்பு நாளது வந்தது
காரும் வந்தது ....
மாப்பிள்ளையின் ஊரும்
உறவும் அளவோடு வந்தன.
படத்தில் பார்த்த மாப்பிள்ளை சாயலில்
காதில் கடுக்கனும் கழுத்தில் பெரிய கயிறனைய சங்கிலியும்
நடையும் தளர்ந்த ஓர் மனிதர் இறங்கினாரடி.
மாப்பிள்ளைப் பையனின் தந்தை என நான் மனதிலே நினைத்தேனடி. தோழி
மனதிலே நினைத்தேனடி.

அடுத்தடுத்துப் பலர் இறங்கினர் வந்தனர்.
மாப்பிள்ளை மட்டும் இன்னும் வரவே இல்லையடி....
ஏக்கத்தோடு என் பார்வை
படலையைப் படலையை
பார்த்துப் பார்த்து தவித்து இருந்தது....

கை நனைக்க முதல் காரியங்கள் கதைக்கோணும் என
வந்த பெண் ஒருத்தி அமைதியைக் குலைத்தனள்.

மாப்பிள்ளை எங்கே?  என
என் தந்தை வினவினார்.
"நான் தானுங்கோ " அந்த
நடை தளர்ந்த கிழம் சொன்னது.
அடுக்குமாடி உடைந்தது போல என்
கற்பனை கவிழ்ந்ததடி.. ஐயோ....
உடுக்கு அடித்தாலும்
உரு வந்து ஆடமுடியா
கிழ மனிதன் ஆசையை
என்னென்று சொல்வேனடி ? தோழீழீழீழீழீழீ...
என்னென்று சொல்வேனடி ?

அப்பாவைப் பார்த்தேன்.
என் பார்வையில் மனிசன்
அரைவாசி செத்தாரடி....
 "ஐயா எழும்பிப் போங்கோ " எனச் சொல்லி
சந்நதம்  போட்டேனடி.
இளமைக்கால அவன் படத்தை
எதிரிலே எறிந்தேன் .
அவன் எடுத்துக் கொண்டானடி.
மெல்ல மெல்ல நடந்து அவன்
போவதைப் பார்க்கையில்
சிரிப்புத் தான் வந்ததடி தோழி
சிரிப்புத் தான் வந்ததடி.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹