காலம் கரைக்கும்.
தகித்துக்கொண்டிருந்த ஆத்மா
தான் எடுத்த
உருவை அழித்து,
தன்னுருக்கண்டு மயங்கியோரைத்
தண்டித்த வெறித்தனத்தில்
மீளாத்துயிலை
சடலத்திற்கு வழங்கியது.
வலியோடிய நரம்புகள்
ஓய்வுற்றன.
வதை சுமந்த குருதி
உறைந்து போனது.
குற்றப்போர்வை போர்த்திய
மௌனிகள்
வாய்மூடி
கரையுண்டு போகும்
தேகத்தைச் சுமந்து
நடமாடும் ஆத்மாவை
அணைத்தழுதார்.
ஆத்மா விட்டேகிய
பிண உடல்
தாள தப்பட்டை
சங்கோசையோடு
இறுதி புகுந்த
இடம் விட்டு நகர்ந்தது.
பிண உடலை
எரிகொள்ளி மேவியது .
எரியுண்ட தேகச்சாம்பல்
கரையுண்டு போனது கடலில்.
காரணமின்றி எதுவுமில்லை.
காரியர்கள் இனி
நினைவைக் கரைப்பார்.
கரையும் வரை
நினைவுகளில் கரைவார்.
காலம் கரைக்கும்.
எல்லாமே கரைந்து போகும்.
Latha kanthaiya
(வன்னிமகள் எஸ்.சஞ்சிகா)
.
Comments
Post a Comment